உலு லங்காட், பிப் 14- ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஒன்பது நீர் தூய்மைக்கேட்டுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சான் கூறினார்.
அந்த சம்பவங்களை சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் முன்கூட்டியே கண்டறிந்த த்தால் நீர் சுத்திகரிப்பு மையங்களை மூட வேண்டிய அபாயம் தவிர்க்கப்பட்டதாக அவர் சொன்னார்.
முதலாவது சம்பவம் கடந்த மாதம் 14 நிகழ்ந்ததாகக் கூறிய அவர், இச்சம்பவத்தில் இரசாயனக் கழிவுகள் சுங்கை சிஞ்சாங் செல்லும் கழிவு நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டது என்றார்.
இம்மாதம் 11 ஆம் தேதி நிகழ்ந்த ஆகக்கடைசி சம்பவத்தில் செமினி ஆற்றின் அருகே உலோகங்களை உருக்கும் பணி மேற்கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
மாநிலத்தில் நீர் வளங்களைப் பாதுகாப்பதற்காக லுவாஸ் நிறுவனத்தின் விரைவு பணிக்குழு ஆற்றோரங்களில் 24 மணி நேர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆற்று நீர் மாசுபடுவதற்குரிய சாத்தியம் உள்ள நடவடிக்கைகள் ஆற்றோரங்களில் மேற்கொள்ளப்படுவதை அறிந்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
செமினி, ஜாலான் சுங்கை லாலாங் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தொழிற்சாலையை சோதனையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்தாண்டு முழுவதும் 19 நீர் மாசுபாடு சம்பவங்கள் முன்கூட்டிய கண்டறியப்பட்டு நீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது.