ஷா ஆலம், பிப் 15– சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறும் காலை மற்றும் இரவுச் சந்தைகளில் வணிகர்களும் வாடிக்கையாளர்களும் எஸ்.ஓ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றும் விதம் மேம்பாடு கண்டு வருகிறது.
இவ்விரு சந்தைகளும் இதுவரை எந்த இடையூறுமின்றி சீராக நடைபெற்று வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
கடந்த முறை அமலாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் வழி கிடைத்த அனுபவம், இம்முறை உரிய முறையில் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை ஊராட்சி மன்றங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.
காலை சந்தைகள் கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கி அதிகாலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் இரவு சந்தைகள் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்படுவதற்கான அனுமதி இம்மாதம் 5 தேதி வழங்கப்பட்டது.