கோப்பன்ஹெகன், பிப் 23– கோவிட்-19 பெருந்தொற்று வரும் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் கிளேக் கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் பரவல் 2021ஆம் ஆண்டிலும் தொடரும். எனினும், அது கடந்தாண்டை விட கட்டுப்பாட்டில் இருக்கும் என்று டென்மார்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
மோசமான காலக்கட்டத்தை நாம் கடந்து விட்டோம் எனக் கூறிய அவர், 2020 தொடக்க காலத்தைக் காட்டிலும் இப்போது அந்நோய்த் தொற்று குறித்த நிறைய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன என்றார்.
எனினும், கோவிட்-19 பெருந்தொற்றின் எதிர்காலம் குறித்து யாராலும் கணித்துக் கூற முடியாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.
நோய்த் தொற்று தொடர்ந்து இருக்கும். எனினும், அதனை எதிர்கொள்ள கட்டுப்பாடுகள் தேவைப்படாது. இதுவே நம்பிக்கையூட்டும் சமிக்ஞையாகும் என்றார் அவர்.
உருமாறிய வைரஸ் என்பது வழக்கமான ஒன்றுதான். நோய்த் தொற்று கண்டவரின் உடலில் வைரஸ் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையே இதுவாகும். எனினும், அதிவிரைவான வைரஸ் உருமாற்றம் குறித்துதான் நாம் அச்சப்பட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
அதிவிரைவாக பரவும் வைரஸ் கிருமிகளை எதிர்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் அக்கத் தன்மை குறித்து உலக சுகாதார நிறுவனம் கண்காணித்து வருவதாகவும் ஹான்ஸ் கூறினார்.