ஷா ஆலம், மார்ச் 11– சிலாங்கூர் மாநில மக்களிடையே பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பைகளின் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மெர்டேக்கா சென்டர் எனும் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
அந்த விழிப்புணர்வின் அளவு சுமார் 88 விழுக்காடாக உள்ளதை அந்த ஆய்வு காட்டுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நெகிழிப்பைகளின் பயன்பாட்டிற்கு எதிரான பிரசாரம் சமூகத்தின் மத்தியில் ஒரு கலாசாரமாக மாறிவிட்டதை இது காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நெகிழிப்பை பயன்பாட்டிற்கு எதிரான பிரசார இயக்கத்தை கடந்த 2008ஆம் ஆண்டில் தொடக்கி 2013ஆம் ஆண்டில் அதனை தீவிரமாக அமல்படுத்தினோம். தொடக்கத்தில் இந்த இயக்கத்தை பலர் இலகுவாக எடுத்துக் கொண்டதோடு கேலியும் செய்தனர். ஆனால் இடைவிடாத முயற்சியின் பலனை இப்போது காண்கிறோம் என்றார் அவர்.
இங்குள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் நெகிழிப்பைகளின் பயன்பாட்டிற்கு எதிரான திட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எனினும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான வர்த்தக நடவடிக்கைகள் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுவது இந்த இயக்கத்திற்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.
இக்காலக்கட்டத்தில் உணவு உள்ளிட்ட பொருள்களை பொட்டலமிடுவதற்கு பிளாஸ்டிக், போலிஸ்ட்ரின் அல்லது மறுசுழற்சி பொருள்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. எனினும், சில இணைய பொருள் விநியோக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருள்களை அனுமதிப்பதில்லை என்ற நிபந்தனையை கொண்டிருப்பதாக அறிகிறேன் என்றார் அவர்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் நெகிழிப்பைகளற்ற வாரமாக அனுசரிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த இயக்கம் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது