கோல சிலாங்கூர், மார்ச் 12- இங்குள்ள தாமான் கமாசான் மற்றும் கம்போங் குவாந்தான் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோல சிலாங்கூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உடனடி நிவாரணமாக நிதியுதவி வழங்கினார்.
பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தக் கட்ட உதவியைப் பெறுவதற்கு ஏதுவாக இவ்விவகாரம் சமூக நல இலாகாவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது அறிக்கை ஒன்றில் கூறினார்.
நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் ஏற்பட்ட அந்த பேரிடரில் அவ்விரு பகுதிகளிலும் உள்ள ஏழு வீடுகள் பாதிக்கப்பட்டதாக கூறிய அவர், அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் உயிருடற்சேதமோ காயமோ ஏற்படவில்லை என்றார்.
கடுமையான புயல்காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்ததால் வீடுகளில் மழை நீர் புகுந்து தளவாடப் பொருள்கள் மற்றும் மின்சார பொருள்கள் சோதமடைந்தன என்றார் அவர்.
கடந்த 6ஆம் தேதி இதேபோன்ற பேரிடர் சம்பவம் பண்டார் பாரு சாலாக் திங்கி பகுதியில் நிகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய புயல்காற்றில் 100 வீடுகளும் இரு பள்ளிகளும் சேதமடைந்தன.