ஷா ஆலம், மார்ச் 19- பூச்சோங் பெர்மாய், டத்தாரான் நியாகாவில் பாசார் மாலாம் நடத்துவதற்கு அனுமதி வழங்க சுபாங் ஜெயா மாநகர் மன்றம் இணங்கியுள்ளது.
அந்த பாசார் மாலாம் வியாபாரம் வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடத்துவதற்கு அனுமதிக்கப்படும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் வியூக நிர்வாகத் துறையின் துணை இயக்குநர் அஸ்பாரிசால் அப்துல் ரஷிட் கூறினார்.
எனினும், லைசென்ஸ் உள்ள வணிகர்கள் மட்டுமே அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தில் பலர் இன்னும் பதிவு செய்யாத காரணத்தால் விதிமுறைகளுக்கேற்ப அவர்கள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்று நினைவுறுத்தினார்.
அந்த பாசார் மாலாம் நடவடிக்கையை மாநகர் மன்றம் நிர்வகிக்கும் என்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றார் அவர்.
அந்த பாசார் மாலாமை சொந்தமாக ஏற்று நடத்த பூச்சோங் மார்க்கெட் வணிகர்கள் சங்கம் முன்பு விண்ணப்பம் செய்திருந்தது. எனினும், அந்த விண்ணப்பத்தை மாநகர் மன்றம் நிராகரித்து விட்டது.