ஷா ஆலம், மார்ச் 26– இவ்வாண்டில் சுமார் 1,200 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் திட்டமிட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வராத காரணத்தால் அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் கவனப்போக்கை கருத்தில் கொண்டு இந்த முதலீடு கணிக்கப்பட்டதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸாரில் இட்ரிஸ் கூறினார்.
தங்கள் முதலீட்டு மதிப்பை உயர்த்தும் திட்டத்தை பல நிறுவனங்கள் தாமதப்படுத்தி வருகின்றன. அடுத்தாண்டு வரை இந்நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.
தொழில்துறை வாயிலாக 1,200 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டை ஈர்க்க கடந்தாண்டு இலக்கு வகுத்திருந்தோம். ஆயினும், அக்காலக்கட்டத்தில் நமக்கு கிடைத்த முதலீட்டின் மதிப்பு 1,840 கோடி வெள்ளியை எட்டியது என அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு நாட்டிற்கு கிடைத்த 16,400 கோடி வெள்ளி மொத்த முதலீட்டில் 3,870 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடு சிலாங்கூர் மாநிலம் மூலம் பெறப்பட்டது. அத்தொகையில் 1,840 கோடி வெள்ளி முதலீடு தொழில்துறை துறை சார்ந்ததாகும்.