கோலாலம்பூர், ஏப் 1– நாடாளுமன்றத்தைக் கூட்டி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறாமல் கூடுதல் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்த நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதனை நெறியற்ற மற்றும் பொறுப்பற்றச் செயல் என வருணித்த அவர், நாட்டின் பொருளாதார செயல்பாடு மீதான நம்பிக்கையை இது சிதைத்து விடும் என எச்சரித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் தீர ஆராயாமல் அவசர காலச் சட்ட அமலாக்கத்தை காரணம் காட்டி தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
ஆட்சியாளர்கள் இத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் அங்கீகரிக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு அந்த வரவு செலவுத் திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஜனநாயகம் கேலிக்கூத்தாவதை தடுப்பதற்காக நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட்டு உறுப்பினர்கள் தங்கள் பங்கை ஆற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரகாலம் அமல்படுத்தப்பட்டதாக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சமுதாயத்தை அச்சுறுத்துவதற்கும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் இச்சட்டத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவசரகாலத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் கூடுதல் பட்ஜெட்டை அங்கீகரிப்பதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதற்கும் பிரதமர், முதலமைச்சர் மற்றும் மந்திரி புசாருக்கு அதிகாரம் உள்ளதாக மலேசியா கினி கூறுகிறது.