ஷா ஆலம், ஏப் 7- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 126 அரசு ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார்.
மாநில அரசு தலைமைச் செயலகம், கருவூலம், நில மற்றும் கனிமவளத் துறை, சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் மற்றும் மாநில விளையாட்டு மன்றம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் அவர்களாவர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மந்திரி புசார், கோவிட்-19 நோய்ப் பரவல் காலத்திலும் சிறப்பான சேவையையும் அர்ப்பணிப்பையும் வழங்கிய மாநில அரசு பணியாளர்களை தாம் பெரிதும் பாராட்டுவதாகக் கூறினார்.
பேரிடர் சமயங்களில் அரசு நிர்வாகம் அளப்பரிய பங்களிப்பை ஆற்றுவதாகக் கூறிய அவர், எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்வதில் மாநில அரசு பணியாளர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
வளர்ச்சியடைந்த மாநிலம் என்ற சிலாங்கூரின் அந்தஸ்துக்கேற்ப அதன் ஊழியர்களும் உயரிய வேலை கலாசாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.