ஷா ஆலம், ஏப் 18- இணையம் வாயிலாக சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் செய்யப்படுவதை சிலாங்கூர் அரசு கடுமையாக கருதுகிறது.
சமூக ஊடகங்கள் வாயிலாக செய்யப்படும் இத்தகைய விளம்பரங்களைத் தடுப்பதற்கு ஏதுவாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமய விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜவாவி முகமது முக்னி கூறினார்.
இத்தகைய விளம்பரங்கள் பொதுமக்கள் மத்தியில் சூதாட்டத்தை பிரபலப்படுத்தும் என்பதோடு இது ஒரு வகை சூதாட்டம் என்பதை அறியாமலே பொதுமக்கள் அதில் ஈடுபடுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றார் அவர்.
நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை கருப்பொருளாக கொண்ட அந்த விளம்பர காணொளி நாட்டிலுள்ள முஸ்லீம்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
எந்தவொரு தகவல் சாதனத்தையும் பயன்படுத்தி இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மாநில மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை கருப்பொருளாக கொண்டு வெளியிடப்பட்ட அந்த சூதாட்ட ஊக்குவிப்பு காணொளி தொடர்பில் ஐந்து ஆடவர்களையும் மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.