காஜாங்கில் இலவச கோவிட்-19 பரிசோதனை- 27 பேருக்கு நோய்த் தொற்று உறுதி ஷா ஆலம், ஏப் 25- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் காஜாங், சுங்கை லோங்கில் நேற்று நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் நோய்த் தொற்று உள்ள 27 பேர் அடையாளம் காணப்பட்டனர் காம் என் சமூக நல இல்லத்தில் நடைபெற்ற இந்த பரிசோதனை இயக்கத்தில் 634 பேர் பங்கு கொண்டதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த பரிசோதனை இயக்கத்திற்கு கடுமையாக வெயிலும் நோன்பு மாதமும் தடையாக இல்லை என்று அவர் சொன்னார். மாநிலத்தில் நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை கருத்தில் கொண்டு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களை மாநில அரசு மேலும் அதிக அளவில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இறைவன் அருளால் நோய்த் தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம் என்று தனது முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றுவது தவிர்த்து கோவிட்-19 பரிசோதனைகளையும் நாம் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே நோய் கண்டவர்களை தனிமைப்படுத்தி நோயின் சங்கிலித் தொடர்பை துண்டிக்க முடியும் என்றார் அவர்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/10/FW1085124_SB03_06102020_SWAB_COVID-19-960x626.jpg)