ஷா ஆலம், மே 5– சிலாங்கூர் மாநில அரசு கோவிட்-19 கண்காணிப்புத் திட்டத்தை இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி வரை மேற்கொள்ளவுள்ளது. மாநிலம் முழுவதும் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை தீவிரமாக அடையாளம் காணும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
காஜாங் மற்றும் செமினியில் நோய்ப் பரிசோதனை இயக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கங்களுக்கு உண்டாகும் செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
தினசரி இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் என்ற அடிப்படையில் மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் இந்த இலவச பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும் அவர் சொன்னார்.
நோய்த் தொற்று ஆபத்து அதிகம் உள்ள, ஏற்கனவே கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள இந்த திட்டம் பெரிதும் துணை புரியும் என்றும் அவர் கூறினார்.
கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நோய்ப் பரவலை தணிக்கும் அடுத்தக் கட்டத் திட்டத்தை மாநில அரசு தொடக்கியுள்ளது என்றார் அவர்.
நமது சமூகத்தில் பலர் தங்களுக்கு நோய்த் தொற்று இருப்பது தெரியாமல் ஆரோக்கியமான நிலையில் உள்ளது அச்சமூட்டக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்தரப்பினர் குறித்து நாங்கள் மிகவும் அச்சமடைகிறோம். காரணம் இவர்கள்தான் நோய்த் தொற்றைக் பரப்பக்கூடிய தரப்பினராக உள்ளனர் என்றார் அவர்