ஷா ஆலம், மே 5– தன்னார்வ முறையில் பதிந்து கொண்டவர்களுக்கு அஸ்ட்ராஸேனேகா கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்தும் திட்டம் இன்று தொடங்குகிறது.
இம்மாதம் 2ஆம் தேதி முன்பதிவு செய்து கொண்ட சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்தவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, புத்ரா உலக வாணிக மையம், ஷா ஆலம், ஐடியல் மாநாட்டு மையம் (ஐ.டி.சி.சி.) ஆகியவை தடுப்பூசி செலுத்தும் மையங்களாக செயல்படுவதாக அது தெரிவித்தது.
தடுப்பூசி பெறுவோர் அடையாளக் கார்டு அல்லது கடப்பிதழ் மற்றும் மைசெஜாத்ரா செயலி வழி முன்பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசி ஆகியவற்றை உடன் கொண்டு வருவது அவசியம் என்று அது அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த தடுப்பூசியை பெறுவதற்கு சுய விரும்பத்தின் பேரில் பதிவு செய்யும் இயக்கம் கடந்த 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பதிவு தொடங்கிய நான்கு மணி நேரத்திற்குள் 268,000 தடுப்பூசிகளுக்கான முன்பதிவு முழுமையடைந்தது.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வசிக்கும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.