ஷா ஆலம், மே 5- ரமலான் மற்றும் நோன்பு பெருநாள் சந்தைகளைத் தொடர்வது தொடர்பில் மாநில அரசின் அனுமதிக்காக ஷா ஆலம் மாநகர் மன்றம் காத்திருக்கிறது.
மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரத்தில் மாநில அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுபட தாங்கள் தயாராக உள்ளதாக மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் கூறினார்.
சந்தைகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் மாநில அரசு வெளியிடும் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். முடிவு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.
இன்று இங்கு நடைபெற்ற சாலை பாதுகாப்பு இயக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு சந்தைகள் உள்பட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பை தாங்கள் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது 200 அமலாக்க அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். பொது சந்தைகள் மற்றும் ரமலான் சந்தைகளில் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக மேலும் அதிகமான அதிகாரிகளை பணியில் அமர்த்தவுள்ளோம் என்றார் அவர்.