ஷா ஆலம், மே 9- சிலாங்கூர் மாநிலத்தில் வாராந்திர கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்வு கண்டு வருகிறது. இம்மாதம் 1 தேதி முதல் 7ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் நாளொன்றுக்கு சராசரி 1,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 7,380 ஆக பதிவான வேளையில் அதற்கு முந்தைய வாரம் இந்த எண்ணிக்கை 6,398ஆக இருந்ததை சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் ஆய்வுகள் காட்டுகின்றன.
இந்த எண்ணிக்கை உயர்வை கடுமையாக கருதாமலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமலும் இருந்தால் மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படும் என அக்குழு எச்சரித்தது.
இந்நிலைமையைக் சமாளிப்பதற்கும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப் படுத்துவதற்கும் ஏதுவாக மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அது அறிக்கை ஒன்றில் கூறியது.
நோய்த் தொற்று உள்ளவர்கள் பேராங்காடிகள் மற்றும் சந்தைகளுக்கு வருவதால் ஏற்பட்டக்கூடிய நோய்ப் பரவல் அபாயத்தை கருத்தில் கொண்டும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அது தெரிவித்தது.
இது தவிர, மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் எண்ணிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ள விவகாரமும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.