ஷா ஆலம், மே 25- போதுமான அளவு பணியாளர்கள் இருக்கும் பட்சத்தில் வீடு வீடாகச் சென்று கோவிட்-19 பரிசோதனையை மீண்டும் மேற்கொள்வதற்கான சாத்தியத்தை சிலாங்கூர் அரசு ஆராய்ந்து வருகிறது.
நோய்க்கான அறிகுறியைக் கொண்டிராதவர்தகள் பரிசோதனை மையங்களுக்கு குறிப்பாக நோய்த் தாக்கம் அதிகம் உள்ள இடங்களுக்கு வருவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த பரிந்துரையை பரிசீலித்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கோவிட்-19 பரிசோதனை முறையை நாங்கள் மறுசீரமைப்பு செய்து வருகிறோம். வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்தினால் நமக்கு அதிக எண்ணிக்கையிலான ஆள்பலம் தேவைப்படும் என்றார் அவர்.
மந்திரி புசாரின் அதிகாரத்துவ இல்லத்தில் பரிவுமிக்க மனிதாபிமான நிதி திட்டத்தின் தொடக்க நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலவச கோவிட்-19 பரிசோதனை திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டு இறுதிக்குள்ள 50,000 பேரை சோதிக்கும் இலக்கை தாண்டிவிட முடியும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 20 தொகுதிகளில் மட்டுமே இலவச பரிசோதனை இயக்கம் நடத்தப்பட்டுள்ள வேளையில் அதில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்தை எட்டிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில அரசு கடநதாண்டு ஏப்ரல் மாதம் வீடு வீடாகச் சென்று கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்தியது-