ஷா ஆலம், ஜூன் 11– சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் அமல்படுத்தப்படும் போது கடுமையான நோயினால் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் தடுப்பூசியை பெறுவதை உறுதி செய்வதற்காக நடமாடும் பிரிவை மாநில அரசு உருவாக்கவுள்ளது.
இந்நடவடிக்கையின் வாயிலாக அதிகமானோர் தடுப்பூசியை பெறுவதை உறுதி செய்யும் அதேவேளையில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்க முடியும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்கு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
சுகாதார அமைச்சும் இத்தகைய சேவையை வழங்குவதாக அறிகிறேன். எனினும், அதன் எண்ணிக்கை குறைவாக உள்ளதோடு அவர்களுக்கு இதர பணிகளை கவனிக்க வேண்டிய நிர்பந்தமும் உள்ளது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பி40 பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறிய அவர், பெடுலி சேஹாட் திட்டம், மூத்த குடிமக்கள் உதவித் திட்டம், ஸ்மார்ட் சிலாங்கூர் பரிவுமிக்க அன்னையர் திட்டம் ஆகியவற்றின் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவர் என்றார் அவர்.