ஷா ஆலம், ஜூன் 17- நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை தாமதப்படுத்துவதற்கு பல்வேறு காரணங்களை கூறிக் கொண்டிருக்கும் பட்சத்தில் பிரதமர் பதவியை டான்ஸ்ரீ மொகிடின் யாசின் துறப்பது நல்லது என்று பக்கத்தான் கூட்டணி கூறியுள்ளது.
நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் நேற்று கூறியிருந்தது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மன்றம் இந்த கோரிக்கையை முன்வைத்துதது.
அரசாங்கத்தின் நிர்வாக முறையை சரிபார்ப்பதற்கும் சமன் செய்வதற்கும் நாடாளுமன்றம் கூட்டப்படுவது அவசியம் என்று அது வலியுறுத்தியது.
நாடாளுமன்றம் கூட்டப்படும் பட்சத்தில் அவசரகாலச் சட்டம் மற்றும் தேசிய மீட்சித் திட்டம் குறித்து விவாதிக்க முடியும். மக்களுக்கு உதவுவதற்காக செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் குறித்து கருதுக்களை முன்வைக்க இயலும். மேலும் மக்களின் மனக்குமுறல்களை தெளிவாக கேட்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கூட்டுவதை டான்ஸ்ரீ மொகிடின் இன்னும் தாமதப்படுத்தினால் மாமன்னரின் கருத்தை அவர் புறக்கணிக்கிறார் என கருத வேண்டி வரும். மேலும் நாட்டை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கையை அவர் இழந்து விட்டதாகவும் எண்ணத் தோன்றும் என்றும் மூன்று கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட அந்த கூட்டறிக்கை குறிப்பிட்டது.
கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு மற்றும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் அந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.