ஷா ஆலம், ஜூன் 22– நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் 91 வயது மூதாட்டி உள்பட 77 பேர் மரணமடைந்தனர்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த 91 வயது மூதாட்டி ஷா ஆலம் மருத்துவமனையில் காலமானதாக சுகாதார அமைச்சு கூறியது.
நோய்த் தொற்றுக்கு பலியானோரில் பெரும்பாலோர் வயது முதிர்ந்தவர்கள் என்பதோடு உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், நீரிழிவு, இருதய நோய், சிறு நீரக செயலிழப்பு போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என அது தெரிவித்தது.
சிலாங்கூரில் 32 மரணச் சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் 12 சம்பவங்களும் ஜோகூரில் 8 சம்பவங்களும் சரவாவில் ஏழு சம்பவங்களும் கோலாலம்பூரில் ஐந்து சம்பவங்களும் மலாக்காவில் நான்கு சம்பவங்களும் இன்று பதிவானதாகவும் அமைச்சின் அறிக்கை கூறியது.
சபா மற்றும் லவுவானில் தலா மூவரும் பகாங், பெர்லிஸ் மற்றும் திரங்கானுவில் தலா ஒருவரும் இந்நோய்க்கு பலியாகினர்.
கடந்தாண்டு இந்நோய்த் தொற்று பரவியது முதல் இதுவரை 4,554 பேர் உயிரிழந்துள்ளனர்.