HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஆகஸ்டு மூன்றாம் வாரம் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டம்- மந்திரி புசார் கோடி காட்டினார்

கோம்பாக், ஜூன் 20– சிலாங்கூர் மாநில  சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆகஸ்டு மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எனினும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு எஸ்.ஒ.பி. விதிமுறைகளின் அமலாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளின் அமலாக்கம் தொடர்பான விஷயங்களை கவனிக்கும்படி சட்டமன்ற சபநாயகரை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். அனைத்து ஏற்பாடுகளும் தயாரானவுடன்  மேன்மை தங்கிய சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களைச் சந்திப்பேன் என்றார் அவர்.

அவசரகாலச் சட்ட அமலாக்க காலத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவதாக இருந்தால் மாட்சிமை தங்கிய பேரரசரிடம் இதற்கான அனுமதியை தமது தரப்பு கோரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்குள்ள ஸ்ரீ கோம்பாக், டேவான் பெரிங்கினில் நடைபெற்ற மூன்றாம் கட்ட இலவச கோவிட்- பரிசோதனை இயக்கத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :