கோலாலம்பூர், ஜூன் 26– மனோரீதியான ஆதரவு மற்றும் ஆலோசக சேவையை பெறுவதற்கு இவ்வாண்டு தொடங்கி இதுவரை 122,238 பேரிடமிருந்து சுகாதார அமைச்சின் மனோவியல் ஆதரவு தொலைபேசி சேவைப் பிரிவு அழைப்பினை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் 1 தேதி முதல் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வரை இந்த அழைப்புகள் பெறப்பட்டதாக அவர் கூறினார். அவற்றில் 109,806 அழைப்புகள் அதாவது 89.4 விழுக்காடு கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக உண்டான மனோரீதியிலான பாதிப்புகள் தொடர்பான அழைப்புகளாகும் என தெரிவித்தார்.
வேலை, வருமானம் மற்றும் தங்குமிட வசதியை இழந்தது, குடும்ப உறுப்பினர்கள் அல்லது கணவன் மனைவிக்கிடையிலான சண்டை, விவகாரத்து, துன்புறுத்தல் போன்ற உடல் மற்றும் மனோரீதியிலான பிச்னைகளை அந்த தொலைபேசி அழைப்புகள் மையமாக கொண்டிருந்ததாக அவர் மேலும் சொன்னார்.
இத்தகை மன அழுத்தப் பிரச்னைகளை பொதுச்சேவைத்துறை ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் அல்லது முன்களப் பணியாளர்கள் மட்டுமின்றி சமூகத்தின் இதர தரப்பு மக்களும் எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.
கடந்தாண்டு மார்ச் 25ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொலைபேசி சேவை சுகாதார அமைச்சின் உலவியல் ஆலோசக அதிகாரிகள், மனநல தன்னார்வல அதிகாரிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஆலோசகர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இச்சேவையின் வழி தொடர்பு கொள்பவர்களில் பலர் மனோரீதியிலான ஆதரவை நாடுவதோடு ஆலோச சேவையை பெறவும் விரும்புவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
இது போன்ற மன அழுத்தப் பிரச்னைகளிலிருந்து மீள மனதை ஒருநிலைப்படுத்துவது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பது, தன்னிலை மாற்றங்கள் குறித்து மிகுந்த கவனமுடன் இருப்பது போன்ற நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.