ஷா ஆலம், ஜூன் 30- வரும் ஜூலை மாதம் 40 லட்சத்து 8 ஆயிரத்து 710 தடுப்பூசிகளை சிலாங்கூர் பெறும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூர் அதிகமான தடுப்பூசிகளைப் பெறுவதாக சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
சி.ஐ.டி.எப். எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றத்தின் கூட்டத்தில் தாம் கலந்து கொண்ட போது இந்த தகவல் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
சி.ஐ.டி.எப். கூட்டத்தில் நேற்று காலை நான் கலந்து கொண்டேன். வரும் ஜூலை மாத ஒதுக்கீடாக 40 லட்சத்து 8 ஆயிரத்து 710 தடுப்பூசிகள் நமக்கு வழங்கப்படும் தகவல் இங்கு உறுதிப்படுத்தப்பட்டது. இது அதிகப்பட்ச எண்ணிக்கையாகும் என்றார் அவர்.
இதர மாநிலங்கள் பெறும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் சித்தி மரியா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். சரவா மாநிலம் 23 லட்சத்து 89 ஆயிரத்து 582 தடுப்பூசிகளையும் கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா 16 லட்சத்து 14 ஆயிரத்து 421 தடுப்பூசிகளையும் பெறுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜோகூர் (950,618), நெகிரி செம்பிலான் (743,054), பேராக் (688,126), பினாங்கு (591,532), கெடா (519,868) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.