ஷா ஆலம், ஜூன் 30- பெட்டாலிங் மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் நாளை தொடங்கி வரும் ஜூலை 14ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்படும்.
பி.ஜே.எஸ் 5இல் உள்ள மெந்தாரி கோர்ட், சுங்கைவே எஸ்.எஸ்.91ஏ குடியிருப்பு பகுதி மற்றும் பங்சாபுரி வெஸ்ட்லைட் பி.கே.என்.எஸ். ஆகியவையே அந்த மூன்று பகுதிகளாகும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இதுவரை மெந்தாரி கோர்ட் பகுதியில் 137 கோவிட்-19 சம்பவங்களும் எஸ்.எஸ். 91ஏ பகுதியில் 64 சம்பவங்களும் பங்சாபுரி வெஸ்ட்லைட் பகுதியில் 215 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் சொன்னார்.
அந்த மூன்று பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் வரும் ஜூலை முதல் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை அங்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்ய முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.
இதனிடையே, குண்டாங் ஜெயா, கமுடா கார்டன் அந்நியத் தொழிலாளர் குடியிருப்பு, ரவாங் மற்றும் தாமான் மூர்னி ஆகிய நான்கு இடங்களில் நேற்று தொடங்கி 14 நாட்களுக்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இது தவிர, பங்காபுரி ஸ்ரீ ஆயு, பண்டார் பாரு பாங்கி, ஜொஹான் செத்தியா அந்நியத் தொழிலாளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் இதே ஆணை அமல் செய்யப்பட்டுள்ளது.