புத்ரா ஜெயா, ஜூலை 1- நிரந்தரமாக பணியமர்த்தப்படாமலிருக்கும் ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் விவகாரம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
கடந்த மே மாதம் 31ஆம் தேதி வரை மூன்று முக்கிய பிரிவுகளில் 35,216 மருத்துவ அதிகாரிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
யுடி41 பிரிவைச் சேர்ந்த 23,077 மருத்துவ அதிகாரிகள், யுஜி41 பிரிவைச் சேர்ந்த 5,000 பல் மருத்துவ அதிகாரிகள், யுஎப்41 பிரிவைச் சேர்ந்த 7,139 மருந்தக அதிகாரிகள் ஆகியோரே அவர்களாவர் என்று அமைச்சர் கூறினார்.
ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்விவகாரம் தொடர்பான அறிக்கை தயாராகி விட்டதோடு விரைவில் அது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒப்பந்த மருத்துவர்களுக்கான சம்பளத் திட்டத்தை சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்துள்ளதாகவும் இதன் வழி நிரந்தர மருத்துவ அதிகாரிகளின் சம்பளத்திற்கு ஏறக்குறைய இணையான சம்பளத்தை ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளும் பெறுவர் என்றும் அமைச்சர் ஆடாம் பாபா முன்னதாக கூறியிருந்தார்.
நாடு முழுவதும் உள்ள 23,000 ஒப்பந்த மருத்துவர்கள் ஜூலை 26 ஆம் தேதி நாடு முழுவதும் மறியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தாங்கள் நிரந்தர மருத்துவர்களாக நியமனம் பெறுவதற்கு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்ட நிலையில் அம்மருத்துவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.