பெட்டாலிங் ஜெயா, ஜூலை 2– இங்குள்ள மெந்தாரி கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் 500 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடித்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் மூலம் இந்நோய்த் தொற்று பரவியுள்ளது.
கடந்த அறுபது நாட்களில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதை சுகாதார அமைச்சின் ஆவணங்கள் காட்டுகின்றன.
இதன் காரணமாவே, நேற்று முன்தினம் தொடங்கி 14 நாட்களுக்கு அந்த குடியிருப்பு பகுதியில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்டுள்ளது.
அந்த குடியிருப்பு பகுதியிலுள்ள 3,500 வீடுகளில் வசிக்கும் உள்நாட்டினர் மற்றும் அந்நிய பிரஜைகளை உள்ளடக்கிய 17,000 பேரை இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உள்ளடக்கியுள்ளதாக பெட்டாலிங் மாவட்ட அதிகாரி டத்தோ ஜொஹாரி அனுவார் கூறினார்.
நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதிக்குள் நுழையவும் வெளியேறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பொருள்கள் வாங்க வீட்டிற்கு ஒருவர் மட்டுமே அனுதிக்கப்படுவார் என்றார் அவர்.
மேலும், கடுமையாகக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட பகுதியில் தடுப்பூசி பெறும் முதல் குழுவினராக இக்குடியிருப்பாளர்கள் விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வரும் ஞாயிற்றுக் கிழமை தடுப்பூசி செலுத்தப் படவுள்ளது.