ஷா ஆலம், ஜூலை 2– கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நாட்டில் 40 டெல்டா வகை நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இரு சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகின.
சிலாங்கூரில் பதிவான இரு டெல்டா வகை நோய்த் தொற்று சம்பவங்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
எனினும், பேட்டா வகை நோய்த் தொற்று (தென்னாப்பிரிக்கா வகை நோய்த் தொற்று) பரவலைத் பொறுத்த வரை சிலாங்கூர் முன்னிலை வகிப்பதாக கூறிய அவர், இதுவரை அத்தகைய 46 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.
இது தவிர, இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட அல்பா வகை நோய்த் தொற்றினால் சிலாங்கூர் மாநிலத்தில் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
வி.ஒ.சி. எனப்படும் ஆபத்து மிகுந்த மூன்று நோய்த் தொற்றுகளில் இந்தியாவிலிருந்து பரவிய டெல்டா நோய்த் தொற்றே வெகு விரைவில் பரவக்கூடியதாகவும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
இதுவரை நாட்டில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 198 வி.ஒ.சி. வகை நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.