கோலாலம்பூர், ஜூலை 4- அமெரிக்கா அன்பளிப்பாக வழங்கிய பத்து லட்சம் பைசர் கோவிட்-19 தடுப்பூசிகள் நாளை மலேசியா வந்தடையும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறினார்.
அமெரிக்காவின் இந்த உதவி வழி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவதற்குரிய சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.
தடுப்பூசிகளை வழங்கி உதவியதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிலின்கென் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு மலேசிய அரசாங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டில் நோய்த் தொற்று பரவியது முதல் கோலாலம்பூரில் உள்ள தனது து தரகம் வாயிலாக அமெரிக்கா பல்வேறு உதவிகளை நல்கி வந்துள்ளது. சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருந்துகள் பாதுகாப்பு உடைகள், தொடர்பு கருவிகள் போன்றவற்றை அது வழங்கியுள்ளது என்றார் அவர்.
இரு நாடுகளுக்குமிடையிலான இந்த பரஸ்பர உறவு தொடர்ந்து நீடிக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.