கோல கிள்ளான், ஜூலை 5- கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோல கிள்ளான் சட்டமன்றத் தொகுதி சுமார் 4,000 உணவுப் பொட்டலங்களை ஏற்பாடு செய்துள்ளது.
உதவி பெறுவோர் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால் இந்த உணவுப் பொருள் விநியோகம் மக்கள் பிரதிநிதிகள் வாயிலாக இன்று தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.
இந்த உதவித் திட்டம் தொடர்பில் கடந்த ஒரு வார காலமாக நாங்கள் அறிவிப்பு செய்து வந்ததோடு இணையம் வாயிலாக இதற்கான பாரத்தை பூர்த்தி செய்யும்படியும் கேட்டுக் கொண்டோம் என்று அவர் சொன்னார்.
இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உதவியை எதிர் பார்த்து காத்திருப்போர் நம்மிடையே நிறைய பேர் உள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.
ஒவ்வொரு உணவு பொட்டலத்திலும் சுமார் ஐம்பது வெள்ளி மதிப்பிலான அரிசி, சாடின், சமையல் எண்ணெய், பிஸ்கட், சீனி உள்ளிட்ட பொருள்கள் உள்ளதாக கூறிய அவர், பெரிய குடும்பங்களின் ஒரு வாரகாலத் தேவைக்கு இவை போதுமானவையாகும் என்றார்.
இந்த உதவித் திட்டத்திற்கு இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்யத் தெரியாதவர்கள் 017-2434200 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிவிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.