ஷா ஆலம், ஜூலை 12– செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக தடுப்பூசி பெறுவதற்கு தஞ்சோங் சிப்பாட் தொகுதியைச் சேர்ந்த 2,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
இம்மாதம் 5ஆம் தேதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கையில் இந்த எண்ணிக்கை பெறப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.
இன்னும் 500 பேர் தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது. அந்த இடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தொகுதி சேவை மையத்தின் வாயிலாக மேற்கொள்ளும்படி கிராம தலைவர்களை நான் பணித்துள்ளேன் என்றார் அவர்.
கிராமத் தலைவர்களின் ஒத்துழைப்பின் வாயிலாக வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறாமலிருப்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசித் திட்டத்தை பந்திங் மற்றும் மோரிப் தொகுதிகளுடன் ஒன்றிணைக்க தாம் திட்டமிட்டுள்ளதாக புறநகர் மேம்பாடு மற்றும் பாரம்பரிய கிராமத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.