ஷா ஆலம், ஜூலை 15- சிலாங்கூரில் உள்ள சுமார் 1.500 தொழிற்சாலைகள் பங்கேற்றுள்ள “பொய்ஸ்“ எனப்படும் நோய்த் தாக்கம் உள்ள பகுதிகளுக்கான தடுப்புத் திட்டம் தொழில்துறைகளில் கோவிட்-19 நோய்ப பரவல் மேலும் தீவிரமடையாமல் தடுப்பதில் துணை புரிந்துள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பொய்ஸ் திட்டத்தின் வழி வேலையிட நோய்த் தொற்று பரவல் அபாயம் பெருமளவு குறைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தொழிற்சாலைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இந்த பொய்ஸ் திட்டம் விளக்குகிறது. இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள 1,500 தொழிற்சாலைகள் நோய்ப் பரவலின் தீவிரத் தன்மையை கட்டுப்படுத்தியுள்ளன என்றார் அவர்.
அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு உருவாக்கிய “சேஃப் அட் வேர்க்“ எனும் திட்டம் ஏறக்குறைய பொய்ஸ் திட்டத்தை ஒத்திருந்தாலும் பொய்ஸ் திட்டம் முன்கூட்டியே ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்று ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
வேலையிடங்களில் அதிகளவில் நோய்த் தொற்று மையங்கள் உருவாக்கம் காண்பதை தடுப்பதற்காக சிலாங்கூர் மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி இந்த பொய்ஸ் திட்டத்தை ஆரம்பித்தது.