ஷா ஆலம், ஜூலை 16- அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்த மேலும் இரு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு மருந்தக கட்டுப்பாட்டு அமைப்பு (பி.கே.பி.டி.) அனுமதி வழங்கியுள்ளது.
சினோபார்ம் மற்றும் ஜோன்சன்& ஜோன்சன் ஆகிய அவ்விரு தடுப்பூசிகளையும் அவசரகாலத் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பி.கே.பி.டி. அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
ஆகக் கடைசி தரவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு, ஆக்கத்தன்மை மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இத்தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
சினோபார்ம் தடுப்பூசி சீனாவின் நேஷனல் பயோடேக் குரூப் கம்பெனி லிமிடட் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜோன்சன்& ஜோன்சன் தடுப்பூசியை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜேன்சன் மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு டோஸ் மட்டும் செலுத்தினால் போதுமானது.