கோலாலம்பூர், ஜூலை 16;- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று பரவலை மதிப்பீடு செய்வதற்கு பொருத்தமான மற்றும் துல்லியமான வழியை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்று மலேசிய முதலாளிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல் செய்வதற்கு அன்றாட கோவிட்-19 நேர்வுகளை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது என்று அச்சம்மேளனம் வலியுறுத்தியது.
மலேசியர்கள் எந்நேரமும் கோவிட்-19 நோய்த் தொற்று குறித்த அச்சத்தில் இருக்க முடியாது என்பதோடு நீண்ட காலத்திற்கு நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டும் இருக்க முடியாது. இந்த சூழலை தாங்கிக் கொள்ளும் சக்தி பொது மக்களுக்கும் வணிகத்துறைக்கும் இனியும் கிடையாது என அது கூறியது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக மக்களில் ஒரு பகுதியினர் மனோரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை, குற்றச் செயல்களில் ஈடுபாடு, குடும்ப வன்முறை, வசிப்பிடங்களை இழப்பது போன்ற நிகழ்வுகள் அதிகளவில் நிகழ்கின்றன.
அதோடு மட்டுமின்றி, நீண்ட காலாமாக அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வர்த்தக தொடர்பு சங்கிலி துண்டிக்கப்பட்டு நாட்டிலுள்ள அந்நிய முதலீட்டாளர்களும் வெளியேறத் தொடங்கி விட்டனர். இந்நிலைமை உடனடியாக சீர் செய்யப்பட வேண்டும் என்று அச்சம்மேளனம் கேட்டுக் கொண்டது.