புத்ரா ஜெயா, ஜூலை 17- இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கு விதிமுறைகளில் சில தளர்வுகளை வழங்குவது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
“இவ்விவகாரம் தொடர்பில் விரைவில் அறிவிப்பை வெளியிடுவோம்“ என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவது மற்றும் மாவட்ட அல்லது மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிப்பது போன்ற தளர்வுகள் வழங்குவது குறித்த பரிசீலிக்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நேற்று முன்தினம் கூறியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விதிமுறை தளர்வு வழங்கப்படுவதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்ப்ட்ட நிர்வாக நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும்படி கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவை தாம் பணித்துள்ளதாக மொகிடின் கூறினார்.