கோலாலம்பூர், ஜூலை 23- இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் மலிவு விலை விற்பனை அறிவிப்புகளை கண்டு ஏமாந்துவிட வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய பெரும்பாலான விளம்பரங்கள் பதிவு பெறாத இணையத் தளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக மேற்கொள்ளப்படுவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் கூறியது.
இணையம் வாயிலாக செய்யப்படும் பொருள் விற்பனை தொடர்பான பல விளம்பரங்கள் மலேசிய சட்டத்திற்கு உட்படாதவையாக உள்ளதோடு சில பொருள்கள் பிரசித்தி பெற்ற பொருள்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன என்று அந்த ஆணையம் தெரிவித்தது.
இது போன்ற மலிவு விற்பனை விளம்பரங்களை நம்பி வாங்கும் பொருள்கள் தாங்கள் எதிர்பார்க்கும் தரத்தைக் கொண்டிராத பட்சத்தில் சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து தங்களுக்கான உரிமையைக் கோருவதில் பயனீட்டார்கள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டி வரும் என்று அது எச்சரித்தது.
இணையம் வாயிலாக செய்யப்படும் விற்பனையை குறித்த விபரங்களை நன்கு ஆராய்ந்தப் பின்னரே தாங்கள் வாங்கும் பொருள்களுக்கான பணபரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொதுமக்களை அந்த ஆணையம் கேட்டுக் கொண்டது.