ஷா ஆலம், ஜூலை 29- நாட்டில் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் சி.ஏ.சி. மையங்கள் அமைந்துள்ள இடங்கள் மீது அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உகந்த சூழலைக் கொண்டிராத இடங்களில் பல சி.ஏ.சி. மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த மறுஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
சி.ஏ,சி. மையங்கள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் நாம் அலட்சியமாக செயல்பட முடியாது. காரணம், இது மனித உயிர்கள், முன்களப் பணியாளர்களின் உழைப்பு, சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன என்றார் அவர்.
தடுப்பூசி மையங்களை திறப்பதற்கு ஆடம்பர தங்கும் விடுதிகள், சௌகர்யமான இடங்களைத் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் சி.ஏ.சி. மையங்களை அமைப்பதில் மட்டும் அலட்சியப் போக்கை கடைபிடிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உடல் நிலையை மதிப்பீடு செய்து அடுத்த கட்ட நடவடிக்கையை சுகாதார அமைச்சு எடுப்பதற்கு வகை செய்யும் ஓரிட மையமாக இந்த சி.ஏ.சி. மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
சி.ஏ.சி. மையங்களில் கோவிட்-19 நோயாளிகள் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்கு ஏதுவாக தடுப்பூசி மையங்களில் வழங்குவது போல் வருகைக்கான முன்பதிவு முறை இங்கும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
அண்மையில், கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் விளையாட்டு மையத்தில் சி.ஏ.சி. மையத்தை அமைக்கும் சுகாதார அமைச்சின் நடவடிக்கை சுற்றுவட்டார மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த மையம் கோலக் கிள்ளான் பல் நோக்கு மண்டபத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.