கோலாலம்பூர், ஜூலை 31- பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகரில் இன்று ஒன்று கூடி பேரணி நடத்தினர்.
கருப்பு உடை அணிந்திருந்த அந்த இளைஞர்கள் “தோல்வி கண்ட அரசாங்கம்“, “வெளியேறுங்கள்“,“லாவான்“ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நேற்று காலை முதல் மெர்டேக்கா சதுக்க வளாகத்தில் ஒன்று திரண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் கோவிட்-19 நோயால் இறந்தவர்களை குறிக்கும் விதமாக வெள்ளை உடை போர்த்திய மனித உடல்கள் போன்ற பொம்மைகளை ஏந்தியிருந்த தாகஃப்ரி மலேசியா டுடே இணைய ஊடகம் கூறியது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தங்களின் தார்மீக ஆதரவை புலப்படுத்தும் விதமாக கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு ஒன்று கூடினர்.
அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் நிலைமை அணுக்கமாக கண்காணித்து வந்ததோடு மெர்டேக்கா சதுக்கம் செல்லும் வழியையும் மூடினர்.
தனது ஒப்புதல் இன்றி அவசரகாலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து மாட்சிமை தங்கிய பேரரசர் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து டான்ஸ்ரீ மொகிடின் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.