ஷா ஆலம், ஆக 9- சிலாங்கூர் மாநிலத்தில் இன்று வரை 17 லட்சத்து 70 ஆயிரம் பேர் அல்லது 37.3 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர். தடுப்பூசி பெற்றவர்கள் தொடர்பான தரவுகள் அடங்கிய விளக்கப் படத்தை தனது முகநூல் வழி பகிர்ந்து கொண்ட மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, மொத்தம் 53 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாக சொன்னார். மேலும் 245,746 தடுப்பூசிகள் சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டன என்றார் அவர். மாநிலத்தில் 35 லட்சத்து 50 ஆயிரம் பேர் அல்லது 74.7 விழுக்காட்டினர் தங்களின் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார். செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்தின் கீழ் அந்நிய தொழிலாளர்களுக்காக 20 லட்சம் தடுப்பூசிகளையும் தடுப்பூசி கம்யூனிட்டி திட்டத்தின் வழி பொதுமக்களுக்காக 5 லட்சம் தடுப்பூசிகளையும் மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/07/klang-MB-Vaksin016-960x595.jpg)