ஷா ஆலம், ஆக 12- இன்று காலை வரை சிலாங்கூர் மாநில மக்கள் தொகையில் 44.4 விழுக்காட்டினர் அல்லது 20 லட்சத்து 90 பேர் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 57 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அவர்களில் 77.17 விழுக்காட்டினர் அல்லது 36 லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களின் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 270,696 தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ள வேளையில் மொத்தம் 70,138 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.
நமது திட்டப்படி இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தடுப்பூசிச் திட்டத்தின் பலனை நாம் காண முடியும். மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டங்களில் உள்ள ஆபத்தான நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்பதோடு மீட்சிக்கான இலக்கை நோக்கில் சரியான தடத்தில் பயணிப்பதற்குரிய வாய்ப்பும் கிட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் தடுப்பூசித் திட்டம் தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை விளக்குவதற்காக இயங்கலை வாயிலாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.