ஷா ஆலம், ஆக 13- சிலாங்கூரில் உள்ள விவசாயிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவும் வகையில் மாநில அரசு 27 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
நெல் உற்பத்தியை அதிகரிப்பது, பூச்சிக் கொல்லி மருந்து கொள்முதல் செய்வது, விதைகளை விநியோகிப்பது, உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் கோல சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் மாவட்டங்களைச் சேர்ந்த 10,868 விவசாயிகள் பயனடைவர் என்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.
உற்பத்தி குறைவுப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒரே ரகத்தை சேர்ந்த நெல் வகைகளை பயன்படுத்துவது மற்றும் சரியான தருணத்தில் அறுவடை செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.