ஷா ஆலம், ஆக 23- நீரை விரயப்படுத்துவதை தவிர்த்து சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மாநில மக்களை சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீடித்த நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மாநில அரசு புதிய தொழில்நுட்ப அமலாக்கம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நீரை சிக்கனமானப் பயன்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.
சுத்தமான நீரை மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக நீர் சேவைத்துறையை வலுப்படுத்துவதற்கும் மாநில மக்களுக்கு நீர் விநியோகம் தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாயிலாக தனது அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில 14 வது சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்தாண்டில் ஏற்பட்ட நீர் மாசுபாடு பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை சுல்தான் வெகுவாகப் பாராட்டினார்.