ஷா ஆலம், ஆக 26- கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக 237 வர்த்தக மற்றும் தொழில் துறைகளை மூடுவதற்கு உத்தரவிடப் பட்டது.
மாநிலத்திலுள்ள 2,457 வணிக மற்றும் தொழில்துறைகளை இந்த சோதனை நடவடிக்கை உள்ளடக்கியிருந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அந்த 237 வர்த்தக மற்றும் தொழில் துறை மையங்களில் 129 சுகாதார அமைச்சின் உத்தரவின் பேரிலும் 108 அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சின் உத்தரவின் பேரிலும் மூடப்பட்டதாக அவர் சொன்னார்.
சோதனைக்குட்படுத்தப்பட்ட 220 தொழிற்சாலைகளில் 79 கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி முதல் ஆகஸ்டு 23 ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது என்றார் அவர்.
மூடுவதற்கு உத்தவிடப்பட்ட 42 உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளுக்கு எஸ்.ஒ.பி. விதிமீறல் தொடர்பில் அபராதமும் விதிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கோவிட்-19 எஸ்.ஒ.பி. விதிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறித்து சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மந்திரி புசார் இவ்வாறு குறிப்பிட்டார்.