ஷா ஆலம், ஆக 27– கோவிட்-19 பரிசோதனையை 60 வெள்ளி கட்டணத்தில் மேற்கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள். புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டிலான் இந்த பரிசோதனை இயக்கம் காம்ப்ளெக்ஸ் அரேனா பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறுகிறது.
ஆண்டிஜென் (ஆர்டிகே-ஏஜி) விரைவு சோதனைக் கருவியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த கோவிட்-19 பரிசோதனை இயக்கம் தினசரி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி நடைபெறும் என்று தொகுதி உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.
அதிகமான பொதுமக்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நோய்த் தொற்று உள்ளவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு தனிமைப்படுத்த இயலும். இதன் வழி நோய்த் தொற்று மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்க முடியும் என்றார் அவர்.
இந்த குறைந்த கட்டண கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் புக்கிட் காசிங் தொகுதி மக்கள் மட்டுமின்றி பிற இடங்களைச் சேர்ந்தவர்களும் பங்கு கொள்ளலாம் என்று அவர் தனது பதிவில் தெரிவித்தார்.
இந்த இயக்கத்தில் ஆர்டிகே-ஏஜி சோதனை கருவி வாயிலான சோதனை தவிர்த்து ஆர்.டி.-பிசிஆர் வழியும் சோதனை மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அவர், 160 வெள்ளி கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த சோதனையின் முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்தில் கிடைக்கும் என்றார்.
அதே சமயம், இந்த ஆர்.டி.-பிசிஆர் சோதனை வழி ஆறே மணி நேரத்தில் சோதனை முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு 250 வெள்ளி கட்டணம் விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.