கோலாலம்பூர், செப் 8– தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் உள்ள மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பில் விரிவான முடிவை எடுப்பதற்கு முன்னர் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்.
இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் அந்த மூன்று தரப்பினரின் பரிந்துரைகளும் ஆலோசனைகளும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படும் என்று மூத்த கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் கூறினார்.
நாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் நமது எதிர்காலத் தலைமுறையினரின் நன்மைக்கானவை என்பது மட்டும் திண்ணம். சிறப்பானதை செய்வதை கல்வியமைச்சு தனது தலையாய கடப்பாடாக கொண்டுள்ளது என்றார் அவர்.
பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பில் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்களுடன் தாம் சந்திப்பு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.