ஷா ஆலம், செப் 9- சிலாங்கூரில் பல்வேறு துறைகளில் 50,000 வேலை வாய்ப்புகள் தற்போது உள்ளதாக பெர்கோசோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது.
தயாரிப்புத் துறையில் 20.5 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளும் போக்குவரத்து துறையில் 15.3 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளும் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறையில் 12.7 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளும் உள்ளதாக சிலாங்கூர் மாநில பெர்க்கேசோ இயக்குநர் ஜைனோல் அபு கூறினார்.
நாட்டின் மேம்பாட்டு மையமாக சிலாங்கூர் விளங்குவதாலும் மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும் இங்கு வேலை வாய்ப்புகளும் மிகுதியாக காணப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
வேலை தேடிக்கொண்டிருப்போர் MYFutureJobs என்ற அகப்பக்கத்தில் பதிந்து கொள்வதன் மூலம் தங்களுக்கு தேவையான துறைகளில் வேலை வாய்ப்பினை பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை கோவிட்-19 பெருந்தொற்று உள்பட பல்வேறு காரணங்களால் 16,290 பேர் வேலை இழந்துள்ளதாக ஜைனோல் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். இந்த எண்ணிக்கை மே மாதம் வரை குறைந்து ஜூன் மாத த்தில் 2,000 ஆக அதிகரித்தது என்றார் அவர்.