ஷா ஆலம், செப் 10- இவ்வாண்டில் எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் பள்ளிகளை மீண்டும் திறக்கும் விஷயத்திலும் இவ்விரு தேர்வுகளை எழுதும் மாணவர்கள் மட்டுமே முதலில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 சிறப்பு பணிக்குழுவின் (எஸ்.டி.எஃப்.ஒ.) இயக்குநர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து நிலையிலான மாணவர்களும் வகுப்புகளில் சேர்வதை நான் ஆதரிக்கவில்லை. மாறாக, பள்ளிகளைக் திறக்கும் நடவடிக்கை எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் தற்போதைக்கு முக்கியமில்லை. மாணவர்கள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற வேட்கையில் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பதினெட்டு வயதுக்கும் குறைவான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தடுப்பூசி மையங்களில் அல்லாமல் பள்ளிகளிலே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
தடுப்பூசி செலுத்தும் பணிகளும் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னரே மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்படுவதை குறைக்க முடியும் என்றார் அவர்.