கோல லங்காட், செப் 15- பொது மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய கோல லங்காட் நகராண்மைக் கழகம் போலீஸ் துறையின் ஒத்துழைப்புடன் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும். எஸ்.ஒ.பி விதிமுறைகளை மீறுவோருக்கு தொடக்கத்தில் எச்சரிக்கையும் தொடர்ந்து தவறுகள் செய்யும் பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும் என்று நகராண்மைக் கழகத்தின் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹீம் கூறினார். பொதுமக்கள் கவனப் போக்குடன் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்தாற்போல் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவுறுத்தல்களை மீறி செயல்பட்டால் மட்டுமே அவர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர். சிலாங்கூர் மாநிலம் பொருளாதார மீட்சி திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு மாறியதைத் தொடந்து கோல லங்காட் மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலா மையங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.