ஒருமைப்பாட்டு கொள்கையை வரையும் பணியில் மாநில ஒற்றுமை.ஒருங்கிணைப்பு மன்றம் தீவிரம்
ஷா ஆலம், செப் 15- சிலாங்கூர் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மன்றத்தை (எம்.பி.ஐ.எஸ்.) மாநில அரசு உருவாக்கியுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் ஒருமைப்பாடு தொடர்பான கொள்கைகளை வகுப்பதில் இந்த மன்றம் ஆலோசனை மற்றும் சிந்தனை அமைப்பாக விளங்கும்.
இந்த கொள்கைகளை வரைவதில் டாருள் ஏசான் கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் இன ஆய்வியல் கழகம் மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு இலாகாவை மாநில அரசு புதிதாக அதாவது பூஜியத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
வெறும் வெற்று கோஷமாக அல்லாமல் நடைமுறைக்கு ஏற்றவகையில் இந்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மன்றம் செயல்படுவதை உறுதி செய்வதை மாநில அரசு இலக்காக கொண்டுள்ளது என்றார் அவர்.
தேசிய தினத்தை முன்னிட்டு ”ஜனநாயகக் கொள்கையும் மலேசிய இனத்தின் உருவாக்கமும்- சவால்கள், தடைகள் மற்றும் எதிர்காலம்” எனும் தலைப்பில் இயங்கலை வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மன்றத்தை உருவாக்குவது தொடர்பில் மெர்டேக்கா மாதம் முழுவதும் பொதுமக்களிடம் இணையம் வாயிலாக கருத்துக் கணிப்பு பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஒருமைப்பாட்டு கொள்கையை உருவாக்குவதில் பொதுமக்கள் வழங்கும் கருத்துக்கள் பெரிதும் துணை புரியும் எனவும் அவர் சொன்னார்.