ஷா ஆலம், செப் 17- மலேசிய தினத்தை முன்னிட்டு பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் ஏற்பாட்டில் 200 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் பெட்ரோல் விலையில் காணப்படும் நிலைத்தன்மையற்ற போக்கினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் நோக்கில் இந்த இலவச பெட்ரோல் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ரோட்சியா தெரிவித்தார். பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார சுமையை குறைக்கவும் அன்றாட செலவை ஓரளவு மிச்சப்படுத்தவும் இந்த உதவித் திட்டம் துணை புரியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டரசு நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோன் எண்ணெய் நிலையத்தில் நடைபெற்ற இந்த இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்வை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். அந்த நிலையத்திற்கு வந்த நான்கு சக்கர இயக்க வாகனங்களுக்கும் அவர் தேசிய கொடிகளை வழங்கினார். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டத்தை அமல்படுத்திய பத்து தீகா தொகுதி பொறுப்பாளர்களை தாங்கள் பெரிதும் பாராட்டுவதாக இத்திட்டத்தில் பயன்பெற்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் கூறினர்.