பெட்டாலிங் ஜெயா, செப் 17- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்.19 நோய்த் தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்ட சுமார் 250,000 குடும்பங்களுக்கு இதுவரை உணவுக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளதா மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பெருந்தொற்று காரணமாக சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியில் மட்டுமின்றி பொருளாதார மற்றும் வாழ்வாதார ரீதியிலும் உதவ மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைகிறது என்று அவர் சொன்னார்.
சிரமத்தில் உள்ள மக்களுக்கு உதவி தொடர்ந்து தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் அவர்கள் தொடர்ந்து தாக்குப்பிடிப்பதை உறுதி செய்ய பல்வேறு திட்டங்களையும் உதவித் தொகுப்புகளையும் மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என்றார் அவர்.
அந்த உதவித் திட்டங்களில் ஒருபகுதியாக சிலாங்கூர் மாநிலத்தில் 250,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கினோம் என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள கெஅடிலான் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஜெலாஜா பெடுலி நாடி ராக்யாட் எனும் மக்கள் பரிவு வாகன அணியை வழியனுப்பி வைக்கும் நிகழவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்த ஜெலாஜா பெடுலி நாடி ராக்யாட் திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மற்றுமின்றி இதர மாநிலங்களில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கும் மாநில அரசு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.