ஷா ஆலம், செப் 18- மலைச்சாரல் பகுதியில் ஏற்பட்ட நீரோட்ட அதிகரிப்பினால் கொண்டோண்டோங் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் எழுவர் சிக்கிக் கொண்டனர். இச்சம்பவம் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பத்தாங் காலி பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்தது.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அங்கு மலையேறும் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேரில் இருவர் மட்டுமே அந்த ஆற்றை கடந்து மறுகரைக்கு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோர்ஹசாம் காமிஸ் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 7.55 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக கோல குபு பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றார் அவர்.
இரவு 8.27 மணியளவில் நாங்கள் அங்கு சென்ற போது இருவர் மட்டுமே ஆற்றைக் கடந்த நிலையில் மேலும் எழுவர் மறுபுறத்தில் சிக்கிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இச்சம்பவத்தில் யாரும் நீரில் மூழ்கவில்லை. மாறாக அந்த எழுவரும் அங்குள்ள கற்களில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.